“மாத்தியோசி” என்ற தலைப்பின் கீழ் பதிவர்கள் தங்களுக்குள் மாற்றிப் பதிவெழுதலாமே! என்ற கருத்தை  சகோ.வரோ  முன் வைத்த போது    சகோதர்கள் துஸ்யந்தன், மதுரன், கே.எஸ்.எஸ்.ராஜ், மற்றும் ஆமினாவாகிய நான் :-)  அதற்கு விருப்பம் தெரிவித்திருந்தோம். அதன்படி சிறகுகள் ப்ளாக் ஓனர் சகோதரர் மதுரன் அவர்களின் சிறுகதை இன்று  என் குட்டிசுவர்க்கத்தை அலங்கரிக்கிறது.

உங்கள் சகோதரி
ஆமினா முஹம்மத்
_________________________________________________________
நேரம் 12.30 ஐ தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில மணிநேரங்களில் எப்படியும் விடிந்துவிடும். நேரம் என்ன எனக்காக நிற்கவா போகிறது?..................... கலைவாணியின் மனம் ஓரிடத்தில் நின்றபாடில்லை.  என்ன செய்வது? எதிர்த்து நிற்பதும் முடியாத காரியம். எதிர்த்தால் அம்மா அடிப்பா… ஊரார் குசுகுசுப்பார்கள். வெளியில் தலைகாட்ட முடியாது. அம்மா நினைத்து நினைத்து திட்டிக்கொண்டே இருப்பா..
”பேசாமல் இருந்துவிடுவோமா? ஊரில் எனக்கு மட்டுமா நடக்கிறது! எல்லாருக்கும்தானே நடக்குது” மனம் பலவாறாக சிந்தித்தது.


நாளை விடிந்ததும் கலைவாணியின் பூப்புனித நீராட்டுவிழா. வீட்டு முற்றத்தில் ஊரே கூடி பந்தல் போட்டு அலங்காரம் செய்துகொண்டிருக்கிறது. தாயும் தந்தையும் பூரிப்பில் அங்குமிங்குமாக நடந்து வேலைகளை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை “எங்கள் மகளும் வயதுக்கு வந்துவிட்டாள். நாளை அவளுக்கு சேலை உடுத்தி, நகைகள் அணிவித்து ஊரார் முன் கொண்டாடப்போகின்றோமே” என்ற பூரிப்பு. ஊராருக்கோ நாளை ஒரு கொண்டாட்டம்.
ஆனால் கலைவாணிக்கோ அது ஒரு உரிமை பிரச்சினை. அம்மாவும் அப்பாவும் நாளை சந்தோசமாக கொண்டாடப்போகிறார்களே என்பதை விட, இந்த ஆணாதிக்க சமூகத்தின் முன் நாளை என்னை காட்சிப்பொருளாக்கப்போகிறார்களே என்ற எண்ணம்தான் உறுத்திக்கொண்டிருந்தது.
கூடவே இவர்களை எதிர்த்து என்னால் என்ன செய்யமுடியும் என்ற கேள்வியும் குழப்ப மெதுவாக கட்டிலில் சாய்ந்தாள். எவ்வளவோ முயன்றும் தூக்கம் வர மறுத்தது. இரவு கொடுத்த பத்தியச்சாப்பாடு மேசையில் அப்படியே கிடந்தது.
ஜன்னல் வழியே அறைக்குள் படர்ந்திருந்த நிலவொளி கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி நகர்ந்துசெல்ல சில மணிநேரங்கள் அதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவள் நீண்டதொரு பெருமூச்சை விட்டபடியே எழுந்து கதிரையில் உட்கார்ந்தாள்.
”நான் வயதுக்கு வந்ததை மேடை போட்டு, மந்திரம் ஓதி உலகுக்கு அறிவிக்க இவர்கள் யார்?” ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டதை உலகுக்கு அறிவிப்பதில் அவள் பெற்றோருக்காகட்டும், சொந்தங்களுக்காகட்டும் அப்படி என்ன சந்தோசம்?.......
எங்கள் வீட்டில் ஒரு ஆடு தயாராகிவிட்டது. நரிகளே ஓடிவாருங்கள் தசைகளை உண்பதற்கு தயாராகுங்கள் என்று சொல்லாமல் சொல்லுகிறார்களா?
ஒரு ஆண் வயதுக்கு வந்தால் அது பற்றி அலட்டாத சமூகம் பெண்கள் வயதுக்கு வருவதை மட்டும் ஊரறிய கொண்டாடுகிறதே?
தன்னை ருசிக்க காத்திருக்கும் ஓர் ஆணாதிக்க சமூகத்தின் வெறிக்கொண்டாட்டமாகவே அந்த பூப்புனித நீராட்டுவிழாவை அவளால் பார்க்கமுடிந்தது.

”நாளை நடக்கும் அவர்களின் விழாவில் என் சுதந்திரங்கள்கூட பலிகொடுக்கப்பட்டுவிடுமே!! விரும்பிய ஆடை அணியமுடியாது, விரும்பிய இடம் செல்லமுடியாது, எல்லோருடனும் பேசமுடியாது, ஆண்களுடன் கண்டபடி கதைக்கக்கூடாது, பொது இடத்தில் முன்னுக்கு நிக்கக்கூடாது….. இப்படி எத்தனையோ…”
“மொத்தத்தில் நாளையிலிருந்து வேள்விக்காக பொத்தி பொத்தி வளர்க்கப்படும் ஆடுபோல நானும் ஆகிவிடுவேனே”
இதுவரை அடக்கிவைத்திருந்த அவளது கோபங்கள் கண்களிண் வழியாக உடைந்து கண்ணீராக வெளியேறின.
“என்ன நடந்தாலும் சரி! இவர்களின் தாளத்துக்கு நான் ஒருபோதும் ஆடப்போவதில்லை” நெஞ்சை சுட்ட கோபத்தினால் எழுந்த உறுதி மனதில் ஒருவித வெறுமையுடன் கூடிய அமைதியை தந்தது அவளுக்கு. அந்த அமைதியுடனேயே இலேசாக கண்ணயர்ந்து போனாள் கலைவாணி.

“ அம்மா கலை…. எழும்பும்மா... எழும்பி கெதியா குளி..” அம்மாவின் குரல் தூக்கத்தை கலைக்க மெதுவாக எழுந்து கட்டிலிலேயே சாய்ந்துகொண்டாள். ”இரவு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. யார் என்ன சொன்னாலும் சரி” தனக்குள் தானே கறுவிக்கொண்டாள். 


“என்னடி பிள்ளை இன்னும் குள்ளிக்கேல்லயே….. கெதியா எழும்பு.. போய் குளி” படபடத்தவாறே வந்த அம்மாவை ஒருகணம் வெறித்துப் பார்த்த கலைவாணி “அம்மா எனக்கு விருப்பம் இல்லை. நான் வெளிக்கிட மாட்டன்” என்றாள்.
அம்மா ஸ்தம்பித்துப்போய் திரும்பினாள். ”என்ன பிள்ளை சொல்லுற? ஏன் உன்ர வயதுப் பிள்ளையள் இப்பிடியே சொல்லுதுகள்? உன்ர அப்பன் என்னத்துக்கு கஷ்ரப்பட்டு உழைக்கிறார். உன்ன நல்ல இடத்தில கட்டிக்குடுக்கத்தானே. இப்படி கொண்டாடாட்டி சனம் நாலுவிதமா கதைக்குங்கள். உனக்கு ”ஒண்டும்” ஆகேல்ல எண்டு கதைச்சா உன்ர வாழ்க்கையே நாசமா போயிரும்”
“இல்லையம்மா அது வந்து….”
“ஒண்டும் கதைக்காத.. நீ சின்னப்பிள்ளை. உனக்கு இப்ப ஒண்டும் தெரியாது! சனம் ஒவ்வொரு விதமா கதைச்சா உன்ன எவன் கட்ட வருவான்? பிறகு நானும் கொப்பரும் மருந்த குடிச்சு சாகவேண்டியதுதான்…. நாங்க என்னத்துக்கு இவ்வளவு கஷ்டப்படுறம்…..”
அம்மா விசும்பத்தொடங்கிவிட்டாள். ”இஞ்ச பார்… நாளைக்கு நாங்க உயிரோட இருக்கோனும் எண்டா பேசாம வெளிக்கிடு…. இல்லாட்டி உன்ர எண்ணத்துக்கு நட……..” என்று கூறிவிட்டு விசுக்கென்று வெளியே போய்விட்டாள் அம்மா.

”அவளுக்கென்ன தெரியும்.. பழமையிலேயே கட்டுண்டவள். ஆண்கள் எம்மை அடக்கிவைத்திருக்க போட்ட எழுத்தில்இல்லாத சட்டத்தையெல்லாம் பண்பாடாக கருதி ஏற்றுக்கொண்டிருக்கிறாள். அவளை பொறுத்தவரை இந்த பூப்புனித நீராட்டுவிழா ஒரு சம்பிரதாயம். நாளை என்னை காட்சிபொருளாக்கி ரசித்துக்கொண்டிருப்பவர்களின் முன்னால் நான் கூனிக்குறுகி உட்கார்ந்திருக்கப்போவது அவளை பொறுத்தவரை ’அடக்கமான பெண்’ அவளுக்கு இப்போது சொன்னாலும் புரியப்போவதில்லை.
”என்ன செய்வது? அப்பாவும் அம்மாவும் என்னை கஷ்ரப்பட்டு வளர்த்தவர்கள். அதற்காக என் உரிமைகளை விட்டுக்கொடுக்கலாமா?”
”ஒருவேளை நான் மறுத்துவிட்டால் அம்மா சொன்னதுபோல தற்கொலை செய்துகொண்டால்???”
அம்மா அழுத்தக்காரி. சொன்னதை செய்துவிடுவாள்.
நீண்டநேர சிந்தனைக்கு பின் கட்டிலை விட்டு எழுந்தாள்.
“என் உரிமைகளைவிட அம்மா அப்பாதான் முக்கியம்… ஆனால் ஒன்று…. என் பிள்ளைக்கும் இதே நிலை வர நான் அனுமதிக்கப்போவதில்லை…”


by
மதுரன் ரவீந்த்ரன்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அரும்பதங்கள்
கொப்பர் :- அப்பா
கெதியா :- விரைவாக, சீக்கிரமாக
_____________________________________

மாத்தியோசித்தவர்கள் :-)

மதுரனின் பதிவு குட்டிசுவர்க்கத்தில்-  நிலவுகள் விற்பனைக்காக

சகோ வரோவின்  ப்ளாக்கில்-  என் பதிவு பழமையிலேயே புதுமை கண்ட இஸ்லாம் பாகம்-2

துஷ்யந்தனின் ப்ளாக்கில் வரோ வின் பதிவு  ஊரில ஹீரோ! வெளிநாட்டில ஸீரோ!

மதுரனின் ப்ளாக்கில் ராஜ்'ன் பதிவு   குஸ்பு என்றும் இளமையான பூ

ராஜ்'ன் ப்ளாக்கில் துஷ்யந்தனின் பதிவு  நம்பிக்கை என்பது அவரவர் விருப்பம். அதை ஏன்  விமர்சிக்க வேண்டும்?

, , ,

43 comments:

  1. கலாச்சாரம் என்ற பெயரில் பெண் அடிமைத்தனங்கள் ஏராளம்...  இந்த சமூகத்துக்கு நல்லதொரு சவுக்கடி சிறுகதை.

    ReplyDelete
  2. என்னதான் நாம் கூப்பாடு போட்டாலும் இவர்கள் திருந்தபோவது இல்லை...

    ஆனால் இங்கொரு உண்மையை நான் அவதானிக்க வேண்டும்.
    இப்படிப்பட்ட முட்டாள் தனங்களில் இருந்து    
    அவ்ளோ சீக்கிரமாய் நாம் வெளியே வந்துவிடமுடியாது..

    அதைவிட இன்று இதை எதிர்க்கும் கலைவாணி தன் பெற்றோருக்காக மனம் மாறி ஆனாலும் தன் பிள்ளைக்கு இப்படி செய்யமாட்டேன் என்கிறாள்..
    இதை நான் நம்ப மாட்டேன்.. நாளை கலைவாணியும் தாயாகும் போது இயல்பாகவே மாறி விடுவாள் தன் பிள்ளையையும் தன்னைப்போலவே காட்சிபொருள் ஆக்கிவிடுவாள்..  கலைவாணியின் அந்த மாற்றத்தையும் தப்பு சொல்ல முடியாது.. அவள் வளரும் சமூகம் அப்படிப்பட்டது. :(

    ReplyDelete
  3. சுமூக சீர்திருத்த அழகான சிறுகதையை படைத்த மதுரனுக்கும் அதை வெளியிட்ட அக்காவுக்கும் நன்றி&வாழ்த்துக்கள் ^_^

    ReplyDelete
  4. பெண்களை பூக்களாக நடக்க வைப்பதும், புயலாக மாற்றுவதும் ஒரு ஆண்தான் இல்லையா, அருமையான சிறுகதை வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  5. ஒரு பெண்ணின் சுய சிந்தனையை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் சமூகம் அதற்க்கு தடைகளை பல விதங்களில் உருவாக்கி வைத்திருக்கும் விதத்தையும் அழகாக சொல்லியிருக்கிறது இந்த சிறு கதை.பகிர்ந்த இருவருக்கும் நன்றி!

    ReplyDelete
  6. தோழர்,
    என் மனைவியிடம் இது குறித்து பல முறை நான் விவாதம் செய்ததுண்டு... என் மகளை சங்கடத்திற்கு உள்ளாக்க கூடாது என்று வாதம் செய்வேன்... ஆனால் புரிந்து கொள்வதில்லை.. கடைசியில் மனைவி சொல்லே மந்திரம் என்று விடுவது பெண் விடுதலையா? அல்லது என் மகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று போராடுவது பெண் விடுதலையா? எது நடந்தாலும் என்னை ஆணாதிக்க வாதி என்று தான் முத்திரை குத்துவார்கள்.. அல்லவா?
    இப்படி தான் உலகில் நடந்து கொண்டிருக்கிறது... அதை பற்றி கவலை படாமல் முன் செல்பவன் தான் ஆண்

    ReplyDelete
  7. முதலில் பதிவுகளைப் பகிர்ந்து வெளியிடும் உங்கள் குழுவிற்கு ஒரு பூங்கொத்து...
    மிக கனமான பதிவு...மதுரன் அவர்களுக்கு ஒரு கை குலுக்கல்..(அப்படியாவது என் கைகளும் இதுபோல் எழுத தொடங்கட்டும்...)

    என் வலைப்பூவில்... அது ஒரு கார்த்திகை மாலை..அன்பே!

    ReplyDelete
  8. @துஷி
    //இதை நான் நம்ப மாட்டேன்..//

    நம்பி தான் ஆகணும் :-)

    1.இஸ்லாம் மார்க்கத்தில் இத்தகைய சடங்குகள் வெறுக்கப்பட்டுள்ளதால் இஸ்லாத்தை கடைபிடிக்கும் எவரும் இதை செய்வதில்லை (முன்பு இதுதவறு என தெரியாமல் செய்தவர்கள் கூட தற்போது மாறிவருகின்றனர்)

    2.சுயமாய் சிந்திக்க கூடிய பலரால் வெறுக்கப்பட்டு வருகிறது.

    3. ஆணாதிக்கவாதம் என நாம் சொல்வது தகர்த்தெறியும் விதமா பல ஆண்களும் இதற்கு மறுப்பு சொல்லிட்டே தான் வராங்க.

    சோ கலைவாணியின் தலைமுறையில் படித்தவர்களால், சுயமாய் யோசிக்க கூடியவர்களால் மாற்றம் ஏற்பட்டும் என்று நான் நினைக்கிறேன் :-)

    ReplyDelete
  9. @சூர்ய ஜீவா

    சிலருக்கு என்னதான் சொன்னாலும் பழமையை விட்டுகொடுக்க மனம் வருவதில்லை. (கலாச்சாரம், பண்பாடு விட்டுகொடுக்க கூடாது என்ற கொள்கை). என்ன செய்ய... இனி வரும் காலமாவது மாற்றங்கள் ஏற்பட்டு முழுவதும் ஒழிக்கப்பட வேண்டும்!

    ReplyDelete
  10. துஷி

    வருகைக்கும் நல்லதொரு தரமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி துஷி

    ReplyDelete
  11. @சகோ நாஞ்சில் மனோ
    //பெண்களை பூக்களாக நடக்க வைப்பதும், புயலாக மாற்றுவதும் ஒரு ஆண்தான் இல்லையா, அருமையான சிறுகதை வாழ்த்துக்கள்...!!!//

    நிச்சயமாக :-)

    உங்கள் வாழ்த்துக்கள் மதுவுக்கு சேர்ந்திருக்கும்

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  12. @கோகுல்

    வருகைக்கும் நல்லதொரு கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  13. @ரூபினா

    உங்கள் வாழ்த்துக்கள் மதுவுக்கு சேர்ந்திருக்கும்

    வருகைக்கு மிக்க நன்றி ரூபினா.

    ReplyDelete
  14. @மயிலன்

    பூங்கொத்து பெற்றுக்கொண்டேன் :-)

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  15. வணக்கம் ஆமினா,வணக்கம் மதுரன்..
    நல்லதோர் சிறுகதை.... துஷி சொல்வதைபோல் அவரும் தாயாகும்போது இதைத்தான் பின்பற்றுவார்..!!?(

    மாத்தி யோசி குழுவிற்கு வாழ்த்துக்கள்.. வித்தியாசமான முயற்சிக்கு வரோவிற்கு  "ஸ்பெசல்" நன்றி-:)

    ReplyDelete
  16. முதலில் மனமார்ந்த வாழ்த்துக்கள் .அருமையான பதிவை தந்த மதுரனுக்கு .

    ReplyDelete
  17. மதுரனின் சிறு கதை நன்றாக இருக்கிறது. இன்னும் சில இடங்களில் இவ்வாறு நடக்கதான் செய்கிறது.. சென்னை சிட்டியிலும் நாகரிகம் வந்தாலும் பெரிய பெரிய பேனர் போடில் அந்த பெண்ணின் படத்தினை போட்டு இந்த விழாவினை செய்கிரார்கள்.. பார்க்க அசிங்கமாக இருக்கிரது.. மாற வேண்டும்

    ReplyDelete
  18. வணக்கம் துஷி!

    உங்களின் ஆழமான கருத்துக்களுக்கு நன்றி.

    //இதை நான் நம்ப மாட்டேன்.. நாளை கலைவாணியும் தாயாகும் போது இயல்பாகவே மாறி விடுவாள் தன் பிள்ளையையும் தன்னைப்போலவே காட்சிபொருள் ஆக்கிவிடுவாள்.. //

    நிச்சயமாக இல்லை துஷி. இன்றைய இளம் சமூகத்தினரிடையே இப்படியான பெண்களை சங்கடத்திற்குள்ளாக்கும் நிகழ்வுகள் பற்றிய தெளிவு பிறந்துள்ளது. இன்றைய இளைஞர்கள்தான் நாளைய சமூக ஆகையால் விழிப்புணர்வு ஏற்படும் என்பது எனது கருத்து.

    ReplyDelete
  19. நன்றி மனோ அண்ணா..

    உண்மைதான்... ஆக்குவதும் பெண் அழிப்பதும் பெண் என்பதை மட்டும் கூறும் நாங்கள் அதற்கு தூண்டல் காரணியாக ஆண்கள் இருப்பதை பல வேளைகளில் மறைத்துவிடுகிறோம்

    ReplyDelete
  20. நன்றி கோகுல்..

    ReplyDelete
  21. நன்றி rufina rajkumar

    ReplyDelete
  22. //என் உரிமைகளைவிட அம்மா அப்பாதான் முக்கியம்… ஆனால் ஒன்று…. என் பிள்ளைக்கும் இதே நிலை வர நான் அனுமதிக்கப்போவதில்லை…”//
    இந்தவரிகளில்தான் மதுவின் தனது தனித்துவமான எழுத்தைக் காண்கிறேன்.

    ReplyDelete
  23. வணக்கம் சூர்யஜீவா!

    உங்கள் மகளின் பக்கம் இருப்பது சுதந்திரம். மனைவியின் பக்கம் இருப்பது அறியாமை. கதையில் குறிப்பிட்டது போல ஆணாதிக்க சமூகத்தின் கட்டுப்பாடுகளை பண்பாடாக ஏற்று வாழும் பெண் சமுதாயத்தில் அவரும் ஒருவராகிவிட்டார். சுதந்திரத்துக்காக அறியாமையை போக்குவதா? அறியாமைக்காக சுதந்திரத்தை அடமானமாக்குவதா?

    ReplyDelete
  24. மது தான் கூறவந்தகருத்தை ஒரு கதாபாத்திரத்தினூடாக சுவாரசியமாக நடத்திச்சென்றவிதம் அருமையாக உள்ளது.மது உங்க எழுத்துக்களில் வித்தியாசமான ஒரு ஈர்ப்பு இருக்கிறது. உங்க பாணியில் தொடருங்கோ

    ReplyDelete
  25. ஆமினா உங்களுக்கும் உங்க மாத்தியோசி நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.உங்க எல்லோரதும் புரிதல் நிலைத்திருக்கட்டும்.

    ReplyDelete
  26. @ மயிலன்

    நன்றி மயிலன். நிச்சயம் நீங்களும் எழுதுங்கள். எழுதுவது என்பதை விட நாம் ஒவ்வொருவரும் தெளிவு பெற்றுவிட்டாலே போதுமானது

    ReplyDelete
  27. @ காட்டான்
    நன்றி காட்டான் மாமா

    வரோவுக்கும் எங்கள் நன்றி

    ReplyDelete
  28. நன்றி ஏஞ்சலின்

    ReplyDelete
  29. நன்றி சிநேகிதி

    நிச்சயமாக எங்கள் காலத்தில் இந்த நிலையை மாற்றுவோம்.

    ReplyDelete
  30. நன்றி அம்பலத்தார் ஐயா

    எல்லாம் உங்களைப்போன்ற பெரியவர்களின் ஆசீர்வாதமும், ஊக்கமும்தான்.

    ReplyDelete
  31. வணக்கம் மது, வித்தியாசமான ஓர் கருப் பொருளைக் கையிலெடுத்து எம் சமூகத்தில் பெண்கள் வயதிற்கு வந்து விட்டார்கள் என்பதனை ஊருக்கு அறிவிக்கும் இழி நிலையினைச் சுட்டியிருக்கிறீங்க.

    சமூகத்திற்கு இப் பதிவு சாட்டையடியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை!

    ஆமினா அக்காவிற்கும், உங்களுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  32. கதை நகர்வு, கருப் பொருளை விலக விடாது சம்பாஷணைகளுடன் நகர்த்திய விதம் அருமை!

    பெண்கள் வேள்விக்குத் தயாராகி விட்டார்கள் என்பதனை அறிவிக்கும் பெற்றோர்கள்.....உண்மையிலே வித்தியாசமான சிந்தனை தான் மது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  33. வணக்கம் அக்கா கொஞ்சம் லேட்டாகிவிட்டது.

    அட மதுரனுக்குள்ளும் என்னமோ இருந்திருக்கு பாருங்களேன் என்ன அருமையான கருத்தை ஒரு குட்டிக்கதையாக சொல்லியிருக்கார்....

    வாழ்த்துக்கள் நல்ல ஒரு கருத்தை சொல்லும் பதிவை வெளியிட்ட மதுரனுக்கும்,ஆமினா அக்காவுக்கும்

    ReplyDelete
  34. SUPER MATHU, THANKS AAMINAA AKKA

    ReplyDelete
  35. இந்த வாரத்திற்கு வலைசரத்தில் ஆசிரியராக இருக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தினமும் வருகை தந்து கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும். மிக்க நன்றி

    ReplyDelete
  36. அட, இந்த ஐடியா நல்லா இருக்கே.. ஷேர் பிளாக்

    ReplyDelete
  37. மதுரணின் கதை மிக அருமை, சரியான பதிவு இதை படிக்கும் அடுத்த தலைமுறையாவது திருந்தட்டும்.
    பாயிஜா ஊர் கூட்டி பேனர் மட்டும் இல்லை ஐய்யோ அலங்கரித்து காரில் உட்காரவைத்து பேண்ட் வாத்தியத்துடன் ஊர்வலம் வேறே//////

    ReplyDelete
  38. சிறுகதை இன்னும் நிழலடுகிறது மனதில்.ஆனால் இது தீரா தொடர்கதை ஆமினா !

    ReplyDelete
  39. @நிரூ
    நன்றி நிரூ

    @ராஜ்
    நன்றி ராஜ்-//அட மதுரனுக்குள்ளும் என்னமோ இருந்திருக்கு பாருங்களேன்//
    அவுக தான் பிரபல பதிவராச்சே ஹி...ஹி...ஹி...


    நன்றி வரோ
    நன்றி ஜலீலாக்கா- வீடியோலாம் எடுக்குறாங்களாம் ;-)

    நன்றி ஹேமா

    நன்றி அதிரா- என்ன உங்க ஸ்பெஷல் வார்த்தைகள்லாம் காணோம் அவ்வ்வ்வ்வ்

    @சகோ தாரிஹ்
    பணியினை சிறப்பாக முடித்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சகோ

    @சிபி
    :-)
    வருகைக்கு மிக்க நன்றி சகோ

    அனைவரின் வருகைக்கும் கருத்துக்களுக்க்கும் மிக்க நன்றி சகோஸ்

    ReplyDelete
  40. enna medam template ellam kalakkala irukkuthu....

    ReplyDelete
  41. அக்கா நாற்றுக்கு திரும்பி வாங்க

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)